
கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்டு 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜே.ஏ.ஜெயலால் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை 15 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தவும், பாதித்தவர்களை காப்பாற்றவும் மருத்துவர்கள் நாட்கணக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது உயிரை துட்சமெனக் கருதும் அவர்கள் வீடுகளுக்குக்கூட செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் குறித்து அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜே.ஏ.ஜெயலால். கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்டு 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.