
நாளை கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் அழைப்பை ஏற்று கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக குமாரசாமி வரும் 23 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் கவர்னரை குமாரசாமி நேற்று இரவு 7.30 மணிக்கு அவரை சந்தித்தார்.
அப்போது ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்கு பின் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த குமாரசாமி செய்தியாளர்கடம் பேசினார்.
அப்போது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க கடந்த 15-ந் தேதி உரிமை கோரியதாகவும், அதன் அடிப்படையில் நேரில் வந்து சந்திக்குமாறு கவர்னர் தனக்கு அழைப்பு விடுத்தாக தெரிவித்தார்.
அதன் பேரில் கவர்னரை சந்தித்து பேசினேன். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு எனக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்பு விழா 23-ந் தேதி(புதன்கிழமை) நடைபெறும் என குமாரசாமி குறிப்பிட்டார். மேலும் ஆளுநர் கொடுத்துள்ள 15 நாள் கெடுவுக்கு முன்னரே சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்..
எங்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க இன்னமும் பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பார்கள். இந்த கூட்டணி அமைய காரணமான சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.
எங்கள் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.
அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம் என்றும் குமாரசாமி கூறினார்.