20 தொகுதிகளின் இடைத் தேர்தல் எப்போது ? தலைமைத் தேர்தல் கமிஷனர் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 20, 2018, 7:38 AM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் .பி.ராவத் கூறினார்.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. அதோடு கருணாநிதி, ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன.

மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு  வரும்28-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று ஆய்வு செய்தார்.

போபாலில் நடைபெற்ற ஆய்வின் இடையே  செய்தியாளர்களுக்கு  அவர் பேட்டி அளித்தார்.திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பு வெளியானவுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய  ஓ.பி.ராவத், திருவாரூர் தொகுதி காலியானதில் இருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதாலும், 20 தொகுதிகளுக்கும் ஒன்றாக இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என கூறினார்.

கடந்த முறை இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து பேசிய ராவத், புயல் எச்சரிக்கை காரணமாகவே  திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை வேறு விதமாக விமர்சித்தன.

குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்று தவறான குற்றச்சாட்டை முன்வைத்தனர். தற்போது ‘கஜா’ புயல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தேர்தல் கமிஷன் எடுக்கும் முடிவின் மீது அனைத்து தரப்பினரும் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என ராவத் கூறினார்.

click me!