+2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை.. கூட்டத்திற்குப் பின் முக்கிய முடிவு.?

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2021, 8:45 AM IST
Highlights

+2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.  

+2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். +2 பொதுத்தேர்வு தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வி அலுவலர்கள், கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். 

 சுமார் 2 மணி நேர ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, +2 பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் உன்னிப்பாக கேட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி நாளை சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இதில் யாருக்கும் பாதகமின்றி முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். ஒருவேளை +2 பொதுத்தேர்வை நடத்துவதாக இருந்தால் உரிய கால அவகாசம் தரப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், திடீரென தேர்வை அறிவிக்க மாட்டோம் என்றும், ஒருவேளை தேர்வை நடத்துவதாக இருந்தால் உரிய கால அவகாசம் தரப்படும் என்றும் விளக்கமளித்தார். மேலும் பேசிய அமைச்சர், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளதாகவும், வரும் 7-ம் தேதி முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் கூறினார். 

போதிய ஊதியமின்றி, வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று பேசிய அமைச்சர், +2 தேர்வு பற்றி முடிவெடுத்த உடன், தனியார் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆப்ஷன்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும், தனித்தேர்வர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் பேசினார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  

click me!