காவல்துறையினர் விசாரணை நடத்தி அப்பகுதியை சேர்ந்த 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர், இதேபோல் ஹப்பூரில் 6 வயது தலித் சிறுமி ஒருவர் ஆகஸ்டு 6-ஆம் தேதி அவரது வீட்டின் அருகிலேயே கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அம்மாநில மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் லட்சுமிப்பூர் கேரியில் தலித் தொழிலாளி ஒருவரின் 13 வயது மகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென காணாமல் போனார், அந்தச் சிறுமியை அவர்களது பெற்றோர் ஊர் முழுவதும் தேடியும் காணவில்லை. அந்நிலையில் அடுத்தநாள் காலை 5 மணி அளவில் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணை நடத்தி அப்பகுதியை சேர்ந்த 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர், இதேபோல் ஹப்பூரில் 6 வயது தலித் சிறுமி ஒருவர் ஆகஸ்டு 6-ஆம் தேதி அவரது வீட்டின் அருகிலேயே கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின் அவர் ரத்தக் காயங்களுடன் புதர் ஒன்றில் தூக்கி வீசப்பட்டு கிடந்தார். அந்த சிறுமியின் உறுப்பில் மிகவும் மோசமான காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புலந்தசகர் மாவட்டத்திலுள்ள குர்ஜா என்னும் பகுதியில் ஆகஸ்ட் 5 அன்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சி நடந்துள்ளது, சிறுமி அப்போது குரலெழுப்ப முயன்றதால் மர்ம நபர்கள் சிறுமியின் குரல்வளையை நெரித்து படுகொலை செய்தனர்.
அந்த சிறுமியின் உடல் கரும்பு தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்திரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மிகவும் குறைவான குற்றங்களே நடக்கின்றன, கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, சட்டம் ஒழுங்கு முன்பிருந்ததை விட நல்ல நிலையில் உள்ளது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் பேட்டி அளித்திருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்களில் 15. 8 சதவீதம் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் பதிவாகின்றன என்றும், அங்கே நாளொன்றுக்கு 11 முதல் 12 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.