தமிழகத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்... அடுத்த 4 நாட்களுக்கு மக்களே உஷார்...

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2020, 2:13 PM IST
Highlights

நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 இருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்போது காற்று மணிக்கு 100ல் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நேற்று தெற்கு தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக  (நிவர்) வலுவடைந்து, அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவை அருகே கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இன்று காலை 8:30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது, நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 இருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்போது காற்று மணிக்கு 100ல் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக 23-11-2020 (இன்று) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை 24-11-2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மிக கனமழையும் பெய்யக்கூடும். 

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதேபோல் நாளை மறுநாள் 25-11-2011 நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். அதேபோல் 26-11-2020 மற்றும் 27-11 -2020 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

click me!