10 சதவிகித இட ஒதுக்கீடு... மத்திய- மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!

By Thiraviaraj RMFirst Published Jan 21, 2019, 12:11 PM IST
Highlights

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்கக்கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்கக்கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு புதிதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக அமல்படுத்தியுள்ளது. மாநிலங்கவையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து  வாக்களித்தாலும் கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி பட்டியல் இனத்தவருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முன்னேறிய வகுப்பினர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் எற்கனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும்.

இதை வறுமை ஒழிப்பு திட்டமாக கருதக்கூடாது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கொண்டுவந்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளோம், மேலும் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்துள்ளோம். எனவே இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து உத்தரவிட்ட நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் இது குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

click me!