அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரணம். எம்ஏல்ஏ, எம்.பிக்களின் ஒருமாத ஊதியமும் தரப்படும். ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 1:56 PM IST
Highlights

ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக் கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழிநின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. 

கொரோனா பெரும் தொற்றினால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும். மேலும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரண பணிகளுக்கு என முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இப்பெரும் தொற்றின் முதல் அலை மக்களை  தாக்கிய நேரத்தில், கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இப்பொழுது அரசிடம் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகிற 1 கோடி ரூபாய் மற்றும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கொடைக் கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழிநின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 '' கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே, இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே, ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே"  என்ற புரட்சித்தலைவரின் கொள்கை வழிநின்று கழக உடன்பிறப்புகள் நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள் என்று புரட்சித்தலைவி அம்மாவின் பெயரால் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளனர். 
 

click me!