
இலங்கையில் பசி பஞ்சம் தலை விரித்து ஆடி வரும் நிலையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியம், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தையும் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுமென மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடை வழங்கிடும் மாறும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் நிதி வழங்க ஏதுவாக வங்கி என் மற்றும் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக "திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”- என்பது வள்ளுவர் வாக்கு.“உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக, 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம்.
மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்.