கிளம்பியாச்சு அடுத்த பூகம்பம்..! மாமல்லபுரத்தில் கொதித்தெழும் சுற்றுலா பயணிகள்..!

By ezhil mozhiFirst Published Oct 28, 2019, 6:25 PM IST
Highlights

மாமல்லபுரத்தின் அழகை அப்படியே பேணிக்காக்கவும், சுற்றி இருக்கக்கூடிய இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் தேவையான பணத்தை பெற தற்போது டிக்கெட் கவுண்டர்களை அமைத்து உள்ளது தொல்லியல்துறை. 

கிளம்பியாச்சு அடுத்த பூகம்பம்..!  மாமல்லபுரத்தில் கொதித்தெழும் சுற்றுலா பயணிகள்..! 

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி  ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்பட்டது. அதற்கு முன்னதாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஓரளவிற்கு இருந்தது. 

ஆனால் இருபெரும் தலைவர்களின் சந்திப்பிற்கு பிறகு மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக உள்ளூர் சுற்றுலா பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை அதிக அளவில் படையெடுத்து வந்து மாமல்லபுரத்தின் அருமை பெருமைகளை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்...புகைப்படம் எடுக்கின்றனர். 

இந்த ஒரு நிலையில் மாமல்லபுரத்தின் அழகை அப்படியே பேணிக்காக்கவும், சுற்றி இருக்கக்கூடிய இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் தேவையான பணத்தை பெற தற்போது டிக்கெட் கவுண்டர்களை அமைத்து உள்ளது தொல்லியல்துறை. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக வெண்ணை உருண்டை பாறை பகுதியை சுற்றி பார்க்க உள்நாட்டவர்களுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தினால் உள்நாட்டவருக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடியும், வெளிநாட்டவருக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையும் அங்கு வைத்துள்ளது தொல்லியல்துறை. இதில் என்ன ஒரு முக்கிய விஷயமெனன்றால் டிக்கெட் கவுண்டர் அருகே உள்ள அறிவிப்பு பலகையில் தமிழ் எழுத்துக்களே இல்லையாம். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் தமிழ் மக்கள். மேலும்  அறிவிப்பு பலகையில் தமிழ் இடம் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அதிகமாக இருக்கும் இந்த ஒரு தருணத்தில் இந்தி திணிப்பு பற்றி பெரும் விவாதமே நடைபெற்று வரும் இந்த ஒரு சமயத்தில் மாமல்லபுரத்தின் அறிவிப்பு பலகையில் தமிழ் இடம் பெறாது இருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

click me!