
இன்றைய கால கட்டத்தில் பலரும் ஆபீஸில் தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலை உள்ளது. இதனால் உடலில் பல விதமான பாதிப்புக்கள் ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் விரைவில் சோர்வு ஏற்பட்டு விடும். இதனால் உற்பத்தி திறனும் பாதிக்கப்படும். இது சோம்பல் உணர்வையும் ஏற்படுத்தும். இதனால் தங்களை ரீசார்ஜ் செய்து கொள்ள என்ன வழி பலரும் தேடுவது உண்டு. இதற்கு மிகச் சிறந்த வழி, மதியம் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வெறும் 10 நிமிடம் நடப்பதால் என்ன மாற்றம் ஏற்பட்டு விட போகிறது என நினைக்கிறீர்களா? இதோ அதற்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிட்ட பின் 10 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
செரிமானம் அதிகரிக்கும் :
மதிய உணவிற்கு பிறகு 10 நிமிடங்கள் நடப்பதால் செரிமானத்திற்கு தேவையான நொதிகள் தூண்டப்படும். இதனால் வயிற்றுப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக வேகமாக செரிமானம் ஏற்படும். இந்த எளிய உடற்பயிற்சி, குடல் வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும். தினசரி வாழ்க்கையில் சிறிய நேரம் வாக்கிங் செல்ல ஒதுக்குவதால் செரிமானத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
எனர்ஜி அளவு அதிகரிக்கும் :
மதிய உணவிற்கு பிறகு சிறிது தூரம் வாக்கிங் சென்று விட்டு வருவதால் உணவிற்கு பிறகு ஏற்படும் மந்த நிலை குறையும். எனர்ஜி அளவு உடலில் அதிகரிக்கும். சிறிய உடல்பயிற்சியாக இருந்தாலும் இது உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் கவனம் செலுத்தும் திறன், பணிகளை விரைந்து முடிக்கும் திறன் அதிகரிக்கும்.
உற்பத்தி திறன் அதிகரிக்கும் :
மதிய உணவிற்கு பிறகு சிறிது தூரம் நடப்பது தொடர் வேலைகளில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொள்ள உதவும். இதனால் மனது தெளிவடையும். கவனம் புதுப்பிக்கப்படும். இதனால் உற்பத்தி திறன், படைப்பாற்றல் அதிகரிக்கும். வேலை தரம் அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்களுக்கு சிறிது ஓய்வு கிடைப்பதால், சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
உடல் எடை குறையும் :
உணவிற்கு பிறகு 10 நிமிடம் நடப்பது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும். இந்த சிறிய வாக் உங்களில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் திசுக்களில் தேவையற்ற கொழுப்புக்கள் படிவது குறையும். வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். எளிய முறையாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உங்களுக்கு தரும். உடல் எடையை சரியாக பராமரிக்கவும் இது உதவுகிறது.
மனஅழுத்தம் குறையும் :
இது போன்ற குட்டி வாக் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். வெளிக்காற்று மேலே படும் போது, புத்துணர்ச்சியும், மனதில் தெளிவும், அமைதியும் ஏற்படும். இது மன அழுத்தம். கவலைகள், வேலைப்பளு தொடர்பான இறுக்கங்களில் இருந்து விடுபட்டு, அமைதியாக வேலைகளில் கவனம் செலுத்த உதவும். மனதில் புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஆகியவை உருவாவதற்கும் உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.