
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் விண்ணை நோக்கி முன்னேறி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து சாதனை படைத்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கவனம் சைக்கிள் பக்கம் திரும்பியது. இருப்பினும் பல கிலோமீட்டர் வரை விரைவாக பயணம் செய்ய இருசக்கர வாகனங்கள் இன்றியாமையாதவையாக மாறியுள்ளது.
எனவே பெட்ரோல், டீசல் தேவையில்லாத மாற்று இருசக்கர வாகனங்களை நோக்கி மக்களின் கவனம் திரும்பியது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அதற்கு முன்னதாக ரூ.499 செலுத்தி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து டெலிவரி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி முன்பதிவு கட்டணம் திரும்பிக் கொடுக்கப்படும் என்றும் தன்னுடைய இணையதளத்தில் ஓலா நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்ட நிலையில், 24 மணி நேரத்திலேயே ஒரு லட்சம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை எந்த ஒரு பிராண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கிட்டியது இல்லை என்று கூறும் அளவுக்கு ஓலாவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
ஜெர்மன் டிசைன் விருது உள்பட சர்வதேச அளவில் பல விருதுகளை ஓலாவின் இந்த ஸ்கூட்டர் வென்றுள்ளது.முழுவதும் மின்சாரம் மூலம் இயங்க உள்ள இந்த ஸ்கூட்டர் பூஜ்யத்தில் இருந்து 50 விழுக்காடு சார்ஜ் ஆவதற்கு வெறும் 18 நிமிடங்களே பிடிக்கும் என்றும், அதன் மூலம் 75 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியுமாம். இதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.