கேரளாவில் லாட்டரி டிக்கெட்டில் கிடைத்த 6 கோடியில் விவசாய நிலம் வாங்கியவருக்கு அந்த நிலத்தில் இருந்து கு மற்றுமொரு அதிர்ஷ்டமாக புதையல் கிடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் 66 வயதான ரத்னகாரன் பிள்ளை என்பவர் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதில் அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு அவர் விட்டின் அருகே நிலம் வாங்கியுள்ளார். விவசாயம் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசையில் 21 செண்ட் நிலம் வாங்கி விவசாயம்செய்யத் தொடங்கினார்.
இதையடுத்து அந்த நிலத்தில் மரவல்லிக் கிழங்கை மண்ணில் புதைக்க நிலத்தைத் தோண்டியுள்ளார். அப்போது கடப்பாறை கம்பி ஏதோ பானையில் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரத்னகாரன் அதை பொறுமையாக தோண்டி வெளியே எடுத்துள்ளார்.
அதை திறந்து பார்த்தபோது 100 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் இருந்துள்ளன. கிட்டத்தட்ட 20 கிலோ 400 கிராம் எடை கொண்ட 2,595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளன.
உடனே உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களுடன் தொல்பொருள் துறை அதிகாரிகளும் வந்து அந்த நாணயங்களை சோதனை செய்துள்ளன.
அதில் 1885 முதல் கடைசியாக திருவிதாங்கூரை ஆட்சி புரிந்த ஸ்ரீ சித்திரா திருனல் பால ராம வர்மாவின் 1949 ஆம் ஆண்டு வரையிலான நாணயங்கள் என கண்டறிந்துள்ளனர். பின் அந்த நாணயங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த புதையல் ரத்னகாரன் பிள்ளையின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது என்பதால், அவருக்கு சட்ட விதிமுறைகளின்படி அவருக்கு அரசு விரைவில் பரிசு வழங்க உள்ளது.