
”கல்லடி பட்டாலும்கண்ணடி படக்கூடாது” என்பது நம் முன்னோர்களின் பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு.
பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப்பாதிப்பு ஏற்படுவதை கண்திருஷ்டி என்று கூறுவா். ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும், ஆசைகளும் உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும் பொழுது, சிலருக்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.
கண்திருஷ்டி பாதிப்பிற்குள்ளான நபர் அடிக்கடி உடல் மற்றும் மனச் சோர்வு கொள்வார். அந்த நபர் எடுக்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து தடை, தாமதங்கள் ஏற்படும். தொழிலில் நஷ்டம், வேலையிடத்தில் பிரச்சினை, வீட்டில் சண்டை சச்சரவுகள், உடல் நல பாதிப்பு, தனது உறவினர்கள் நண்பர்களிடையே பகை போன்றவை ஏற்படும்.
புதிதாக ஆடை உடுத்தினால் அந்த ஆடை எதிர்பாராத விதத்தில் கிழிந்து போவது, தீப்பற்றிக் கொள்வது, மேலும் அந்த புதிய ஆடையில் நீக்க முடியாத கரைகள் ஏற்படுவது, அடிக்கடி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றுவது, தேவையற்ற கவலை, தூக்கமின்மை, கெட்ட கனவுகள் போன்றவை கண் திருஷ்டி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்படும்.
கண் திருஷ்டி கழிப்பதற்கு சிறந்த வழிமுறைகள்:
1. கண் திருஷ்டி கழிப்பதற்கு மிக சிறந்த நேரமாக இரவு, பகல் இரண்டும் கலவையாக இருக்கும் அந்தி வேளையே ஆகும். கண்திருஷ்டி பாதிப்புகளை நீக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு கண் திருஷ்டி கழிக்கும் சமயத்தில் திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி கழிப்பு கொள்ளும் நபரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
2. கண் திருஷ்டி கழிப்பவர், கடுகு, கல் உப்பு, 3 காய்ந்த சிகப்பு மிளகாய்களை ஒன்றாக சேர்த்து வலது கையில் வைத்துக் கொண்டு, கிழக்கு திசை நோக்கி நின்றவாறு திருஷ்டி கழிப்பு கொள்ளும் நபரை, உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமி ருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போட வேண்டும்.
3. வீட்டிற்கு வரும் நபர்களால் திருஷ்டி ஏற்படுவதைத் தவிர்க்க உருளி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாசம் மிக்க பொருட்களை அதில் போட்டு, மிதக்க விட்டு வீட்டின் நிலை வாசப்படி வெளியே வைக்க வேண்டும்.
4. தினந்தோறும் பழைய பூக்களை எடுத்து வீசி, தண்ணீரை மாற்றி புதிய பூக்களை அந்த பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
5. வண்ண மீன்களை கூட கண் திருஷ்டியை போக்கும் ஒரு சாதனமாக பயன்படுத்தலாம். வீட்டிற்குள் நுழையும் நபர்களின் பார்வை முதலில் மீன் தொட்டியின் மீது படும் வகையில் வீட்டின் முன்புறம் அல்லது ஹால் அறையில் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வண்ண மீன்கள் தொட்டியை வைக்க வேண்டும்.
6. தினமும் நீங்கள் குளிக்கின்ற நீரில் சிறிதளவு கல் உப்பு போட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் குளித்தால் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கி, உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி பாதித்துள்ளதாக நீங்கள் கருதினால், செம்புக் காசு அல்லது செம்பு காப்பை குழந்தைகளின் கையில் அணிவிக்க வேண்டும்.
7. திருஷ்டி தோஷம் நம் வீட்டை தாக்காமல் இருக்க வீட்டிற்கு முன்பு பூசணிக்காய், அரக்கர் உருவம் கொண்ட பொம்மைகளை வைப்பதை விட வாழை மரம் மற்றும் இன்னபிற செடிகளை வீட்டிற்கு முன்பாக நட்டு வளர்த்தால் உங்கள் வீட்டை பிறரின் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது.
8. மேலும் சிறு குழந்தைகளின் கால் கட்டை விரலின் நகத்தின் மீது கருப்பு மை வைப்பதால் எவ்வகையான திருஷ்டிகளும் அக்குழந்தைகளை தாக்காது.
இந்த திருஷ்டி பரிகாரங்கள் அனைத்தும் தொன்று தொட்டு நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்தவை ஆகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.