டீ குடிக்கும் பேப்பர் கப்புகளில் ஒளிந்திருக்கும் புற்றுநோய் அபாயம்..!!

By Dinesh TGFirst Published Jan 31, 2023, 5:14 PM IST
Highlights

தேநீர் குடித்து முடித்ததும் தூக்கி எறியப்படும் காகிதக் கோப்பைகள் உடல்நலத்துக்கு பல்வேறு கேடுகளை ஏற்படுத்துகிறது. 
 

டீ குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. சக்கரையில்லாமல், பால் இல்லாமல் தேநீர் குடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலையிலும் மாலையிலும் தவறாமல் தேநீர் அருந்த வேண்டும் என்பது நம்நாட்டில் எழுதப்படாத ஒரு விதியாகும். அதற்கு நடுவில் ஏதாவது தலைவலி, டென்ஷன் ஏற்பட்டால் டீ குடிப்போம். மேலும் நண்பர்கள் உடன் இருக்கும் போது, பசி எடுக்கும் போது அல்லது டீ குடிக்க வேண்டும் என்று தோன்றும் போது தேநீர் குடிப்போம். இன்று நம்மில் பலர் வீட்டை விட, அதிகமாக வெளியில் தான் இருக்கிறோம். காலையில் வீட்டில் டீ குடித்துவிட்டு, டீ குடிப்பதற்கான மற்ற கடமைகளை வெளியில் தான் செய்கிறோம். அப்போது பலரும் எளிதில் தூக்கி எறியப்படும் பேப்பர் கிளாஸில் வாங்கி தான் டீ குடிப்போம். இது உடலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. பல்வேறு நோய் பாதிப்புகள் இதனால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஐ.ஐ.டி காரக்பூரின் ஆய்வு

பேப்பர் கப்பில் டீ குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதாக, ஐஐடி காரக்பூர் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேநீர் அல்லது மற்ற சூடான திரவங்களை காகிதக் கோப்பைகளில் குடிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று முறை காகித கோப்பைகளில் டீ குடிப்பதால், சுமார் 75,000 தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் செல்கள் உடலில் நுழைகின்றன. இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் மெழுகு

நீங்கள் ஒரு டிஸ்போஸ்பிள் பேப்பர் கப்பில் இருந்து தேநீர் அல்லது காபியை பருகும்போது, அதில் பூசப்பட்டுள்ள மெழுகையும் சேர்த்து சாப்பிடுகிறீர்கள். அனைத்து காகித கோப்பைகளும் திரவத்துடன் தொடர்பு கொள்ளும்போது சிதைவதைத் தடுக்க, அதன் மேல்பரப்பில் மெழுகின் மெல்லிய பூச்சு போடப்படுகிறது. அத்தகைய கோப்பையில் சூடான திரவத்தை ஊற்றும்போது, ​​மெழுகு படிப்படியாக உருகி, உணவில் கலப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடல் அடைப்பு

பொதுவாகவே, நமது வயிற்றில் உள்ள அமிலம் எந்த மெழுகையும் வெளியேற்றும். ஆனால் அதை அதிக அளவில் உட்கொண்டால், வயிற்றில் குவிந்து விடும். இது குடலில் அடைப்பை உருவாக்கும். மெழுகு பூசப்பட்ட காகித கோப்பைகளை விட பிளாஸ்டிக் கோப்பைகள் மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது, ஏனெனில் அவை பாலிமர்களை சூடான திரவங்களாக வெளியிடுகின்றன.

 வழிமுறைகள் உள்ளன

காகித கோப்பைகளை தயாரிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு. மெழுகு அடுக்கின் தடிமன் குறைவாக இருக்க வேண்டும் மற்றும் தண்ணீரில் ஊறவைக்கும் போது தயாரிப்பு எந்த நச்சு திரவத்தையும் வெளியிடக்கூடாது போன்ற வழிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இருப்பினும், உற்பத்தியாளர்கள் அதை கண்டுகொள்வது கிடையாது. அதனால் முடிந்தவரை அடிக்கடி வெளியிடங்களுக்கு செல்பவர்கள், தங்கள் கையிலே ஒரு எவர்சில்வர் கோப்பையை எடுத்துக்கொள்வது நல்லது.

கால்கள் அடிக்கடி மரத்துப் போகாமல் இருக்க இப்படி செய்து பாருங்கள்..!!

வேறு என்ன பயன்படுத்தலாம்?

தேநீர் அருந்துவதற்கு எஃகு அல்லது கண்ணாடி கோப்பையைப் பயன்படுத்துவது நல்லது. தேநீர் போன்ற சூடான திரவங்களை காகிதக் கோப்பைகளில் ஊற்றினால், பிளாஸ்டிக் அடுக்கு எளிதில் கரைந்து தேநீர் மூலம் உடலைச் சென்றடைகிறது. அதனால் பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பதை முடிந்தவரை தவிர்க்கவும், முடிந்தவரை ஸ்டீல் மற்றும் கண்ணாடி கோப்பைகளையே பயன்படுத்தவும். அதனால் உடலுக்கு எந்த தீங்கும் வராது. அடிக்கடி சுத்தம் செய்து பராமரித்து வந்தாலே போதுமானது. 
 

click me!