அவங்க பண்ணது மட்டும் சரியா..? தோனிக்கு வக்காளத்து வாங்கும் பிளெமிங்

By karthikeyan VFirst Published Apr 12, 2019, 12:37 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. 
 

ஐபிஎல் 12வது சீசன் பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் தோனி-ராயுடு ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தாலும் கடைசி நேர ஜடேஜா, சாண்ட்னெரின் சிக்ஸராலும் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. 

கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது. ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் பிரச்னை வெடித்தது. போட்டி நடக்கும்போது வெளியில் இருக்கும் வீரர்களோ கேப்டனோ மைதானத்துக்குள் செல்லக்கூடாது. தோனி போட்டியின் இடையே மைதானத்துக்குள் சென்று அம்பயர்களுடன் வாதிட்டதால், ஐபிஎல் விதிமீறலுக்காக போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

தோனியின் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிளெமிங், அந்த விஷயத்தில் எங்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டும். அம்பயர்களிடம் பேசி தெளிவை பெறுவதற்காகவே தோனி களத்திற்கு சென்றார். எல்லா விஷயங்களிலும் சரி-தவறு என்ற கருத்து இருக்கத்தான் செய்யும். ஆனால் நோ பால் என்று அறிவித்துவிட்டு பின்னர் அந்த முடிவிலிருந்து அம்பயர்கள் பின்வாங்கியதால் அதுகுறித்த தெளிவை பெறுவதற்காகவே தோனி களத்திற்கு சென்று அம்பயர்களுடன் பேசினார் என்று பிளெமிங் தெரிவித்துள்ளார். 
 

click me!