திருமணத்தில் தடபுடல் விருந்துகளை தவிர்த்து, ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், உடல் உறுப்பு தான நிகழ்ச்சியோடு மிக எளிமையாக துணை முதல்வர் மகன் வீட்டு திருமணம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர் சுஷில் குமார் மோடி. பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுஷில் குமார் மோடியின் மகன் உத்கர்காஷ், யாமினி திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் நடந்தது.
துணை முதல்வர் இல்லத்தின் திருமணம் போல் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படாமல் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. முதல்வர் ்நிதிஷ்குமார், அமைச்சர்கள் உள்ளிட்ட 150 பேர் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
திருமணத்தில் மேள தாளங்கள், நடனம் ஆகிய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் வைக்கப்படவி்லலை. அதற்கு பதிலாக, வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 350க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வரதட்சனை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வழக்கமாக திருமணத்தின்போது, மந்திரங்களை ஒதுவார்கள் ஓதுவார்கள், ஆனால், இந்த திருமணத்தின்போது, அனைத்து விருந்தினர்கள் கையிலும் மந்திரங்கள் அடங்கிய புத்தகம் அளிக்கப்பட்டு, அனைவரும் மந்திரங்கள் கூறினர். மும்பையில் இருந்து வேதவிற்பனர்களும், பாடகர்களும் அழைக்கப்பட்டு வேதங்களை பாடல்களாகப் பாடினர்.
வகை, வகையான ருசியான உணவுகள் விருந்து ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, விருந்தினர்களுக்கு ’லட்டு’ மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது. லட்டு வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பேப்பரில் குப்பை தொட்டியில் போடவும் என ‘தூய்மை இந்தியா’ வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமல்லாமல், திருமணம் நடந்த, திறந்தவெளி மைதானத்தில், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான ‘ஸ்டால்’ அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இறப்புக்கு பின் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு, விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய மருத்துவமனையில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் 150 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பெயரை பதிவு செய்தனர்.
துணை முதல்வர் இல்லத்தின் திருமணம் என்ற ஆடம்பரம் இல்லாமல், மிகவும் எளிமையாக நடந்த திருமணத்தை முதல்வர் நிதிஷ்குமார் வெகுவாகப் பாராட்டினார். மேலும், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும், இதேபோன்ற திருமணத்தை தங்கள் மாநிலங்களில் நடத்த ஊக்களிக்கப்படும் எனப் பாராட்டினார்.