
எவ்வித ஆவணமும் இல்லாமல் ரூ.6 லட்சத்தை, வங்கியில் மாற்ற முயன்ற 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள், தங்களது கையில் உள்ள பணத்தை மாற்ற கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து மத்திய அரசு, கையில் இருப்பு வைத்துள்ள பணத்தை வங்கியில் செலுத்தி ரூ.4000 வரை மாற்றி கொள்ளலாம். டெபாசிட் செய்ய உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் வரை இருக்கலாம். அதற்கு, எவ்வித வரியும் செலுத்த தேவையில்லை. இதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை பயன்படுத்தலாம்.
மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேல், பணத்தை வங்கியில் செலுத்துபவர்களுக்கு, 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது.
இதையடுத்து பொதுமக்கள், அதிகாலை முதல் அனைத்து வங்கிகளுக்கும் சென்று, பணத்தை மாற்றுவதற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அரசு வங்கியில் வேலை பார்க்கும் 2 அதிகாரிகள், எவ்வித ஆவணமும் இல்லாமல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் போட்டு ரூ.6 லட்சம் எடுத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதிகாரிகள் 2 பேரும், தங்களிடம் இருப்பு வைத்திருந்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, ரூ.6 லட்சம் புதிய பணத்தை கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மீது, மோசடி மற்றும் கிரிமினல் நம்பிக்கை மோசடி வழக்காக பதிவு செய்தனர். பின்னர், 2 பேரையும் கைது செய்தனர்.