
இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15 அன்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 4 பேர் இறந்ததாக அந்நாட்டு தாமதமாக ஒப்புக்கொண்டாலும், மோதலில் 40 பேர் உயிரிழந்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் லடாக்கில் சீனா அத்துமீறலை நிறுத்தவில்லை. இந்த விவகாரம் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 20-ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சி ஜெய்ஜிங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஜோதியை ஏற்றும் நிகழ்வுக்காக சீனா சார்பில் 1,200 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இக்குழுவில், கல்வான் மோதலில் காயமடைந்த குய் ஃபபாவோ என்ற சீன ராணுவ வீரரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனவே, இந்த விவகாரம் சர்ச்சையானது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ஒலிம்பிக் ஜோதி தொடர்பான அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். ஒலிம்பிக் போன்ற ஒரு நிகழ்வை அரசியலாக்குவதற்கு சீனத் தரப்பு தேர்வு செய்திருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர்கள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க, நிறைவு விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாவை நேரடியாக ஒளிபரப்ப செய்ய மாட்டேம் என்று தூர்தர்ஷன் அறிவித்துள்ளது. மேலும் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பனிச்சறுக்கு வீரர் ஆரிப் முகமது கான் என்ற ஒரு வீரர் மட்டுமே கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.