
எருமை இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பலர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் மத்திய அரசு எருமை மாடுகளை வதை செய்வதற்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்யுள்ளார்..
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதற்கும், கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அண்மையில் புதிய சட்டம் போட்டது. இந்த சட்டத்துக்கும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளன. நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்ணும் திருவிழாக்கள் நமைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் சட்டத்தில் இருந்த எருமைகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இப் பிரச்சனையில் மத்திய அரசை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் தாகேஸ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி , கால்நடை வதை தொடர்பான அறிவிப்பாணையில் எருமை மாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது… பாஜகவைச் சேர்ந்த சிலர், எருமை இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதால் தான் மத்திய அரசு எருமை மாடுகளை வதை செய்வதற்கு அனுமதி அளிக்க திட்டமிடுகிறது என குற்றம்சாட்டினார்.
29 சதவீத வாக்குகள் மட்டுமே வைத்துள்ள பாஜக ஒட்டுமொத்த மக்களையும் வதைக்க முயற்சிக்கிறார்கள் என குற்றம்வாட்டியுள்ள மம்தா, யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு அவர்கள் யார்? யார் என்ன உடை அணிய வேண்டும் என்று சொல்வதற்கு அவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.