
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு மற்றும் வர்த்தகம், அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான முக்கிய ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ராணுவ ஒப்பந்தம், இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களைப் பெறவுள்ளது. 100 எஃப்ஜிஎம் 148 ஈட்டி ஏவுகணைகள் (FGM 148 Javelin Missiles) வாங்கப்பட உள்ளன. இவை ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான ஏவுகணைகள்.
25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 எக்ஸ்கலிபர் பீரங்கிக் குண்டுகள் (Excalibur Artillery Rounds) ஆகியவையும் இந்திய ராணுவத்துக்குக் கிடைக்க உள்ளன.
கூடுதலாக, பாதுகாப்புச் சோதனைகள், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள், ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இந்தியா கோரியுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (DSCA) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆயுத விற்பனை மூலம், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும். மேலும், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் திறன் மேம்படுத்தப்படும். இதன்மூலம், பிராந்திய அச்சுறுத்தல்களைத் தடுக்க முடியும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கொள்முதல் செய்யும் எஃப்ஜிஎம் 148 ஈட்டி ஏவுகணைகள், தற்போது ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது ராணுவ வீரர்களின் தோள் மீது வைத்து ஏவப்படும் (Shoulder-fired) ஏவுகணை அமைப்பு. இது டேங்கர் போன்ற இலக்குகளை நீண்ட தூரத்திலிருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்தப் புதிய ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு முக்கியப் பங்களிக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.