
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று பாரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பகுதி வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும் அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போர்க்கால சேமிப்பு கிடங்குகள் மீட்கப்பட்டுள்ளன. என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். பஹல்காமில் உள்ள 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில் இந்த தாக்குதல் நடந்தது. இந்தக் கொடிய தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்துள்ளது.