
மோடியின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போனதால் சுங்கக்கட்டணங்களில் நாடு முழுவதும் பிரளயம் வெடித்தது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கே.கே.சாலை, டெல்லி மும்பை கொல்கத்தா சென்னையை இணைக்கும் தங்க நாற்கர சாலை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லறை தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்து போனது.
மோடியின் அறிவிப்பால் ஏற்கனவே பெட்ரோல், டீசல் கிடைக்காமல் திணறி கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சாப்பாடும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
போதாத குறைக்கு சுங்கச்சாவடி கட்டண சில்லறை விவகாரம் வேறு வாட்டி வதைத்தது. இதனால், நாடு முழுவதும் ஏற்பட்ட அசாதாராண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி 2 நாட்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.
கட்டண ரத்து அறிவிப்பு வெளியாகி 2 நாட்கள் ஓடிவிட்ட நிலையில், இன்று இரவு 12 மணியுடன் சுங்கச்சாவடி கட்டண ரத்து முடிவடைகிறது.
ஆனால், வங்கிகளுக்கும், ATM-களுக்கும் நிதித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அளித்த உறுதிமொழியின்படி பணம் இன்னும் வந்து சேரவில்லை.
இதனால், லாரி ஓட்டுனர்கள் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகளுக்கு தேவையான 100 மற்றும் 50 ரூபாய் பணம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
கையில் இருக்கும் 500 ரூபாயை கொடுத்தால் சுங்கச்சாவடிகளில் சில்லறையை திருப்பி கொடுப்பதற்கு முடியாமல் போகிறது.
இதனால், இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள 4 வழிச்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என நிதின்கட்கரி அறிவித்துள்ளார்.