‘வேதனையா இருக்கு, மத்தியஅரசு சார்பில் பேசுங்கள்’....தமிழக விவசாயிகள் நிலை குறித்து மாநிலங்கள் அவை கவலை

Asianet News Tamil  
Published : Apr 11, 2017, 11:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
‘வேதனையா இருக்கு, மத்தியஅரசு சார்பில் பேசுங்கள்’....தமிழக விவசாயிகள் நிலை குறித்து மாநிலங்கள் அவை கவலை

சுருக்கம்

TN fprmers problem

‘வேதனையா இருக்கு, மத்தியஅரசு சார்பில் பேசுங்கள்’....தமிழக விவசாயிகள் நிலை குறித்து மாநிலங்கள் அவை கவலை

பயிர்கடன் தள்ளுபடி செய்யக் கோரி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 29 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நிலை குறித்து கவலை தெரிவித்த மாநிலங்கள் அவைத் துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்தியஅரசுவிவசாயிகளிடம் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர் போராட்டம்

தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுதலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தூக்கு போட்டுக் கொள்ளுதல், மொட்டை அடித்துக் கொள்வது, நிர்வாணப் போராட்டம் என ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யாரும் சந்திக்கவில்லை

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்கள் அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு  பேச விதி 267ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தை தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்து பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது-

தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு சார்பில் அவர்களின் குறைகளைக் கேட்க ஒருவர் கூட செல்லவில்லை.

தமிழகத்தின் நிலவும் வறட்சியில் இருந்து எங்களை மீட்க, பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், காவேரி நதிகளுடன் நிதிகளை இணைக்க வேண்டும் என என்னிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு பயிர்கடனை நீட்டித்து தருவது குறித்து பிரதமர் அல்லது மூத்த அமைச்சர் யாராவது உறுதி அளிக்க வேண்டும். ஆனால், விவசாயிகளை அவர்கள் கருதவே இல்லை. தமிழக விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு இரக்கம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.

இதை ஆதரித்து பேசிய  அ.தி.மு.க. எம்.பி. ஏ. நவநீத கிருஷ்ணன் எம்.பி. பேசுகையில், “விவசாயிகள் போராட்டத்துக்கு கண்டிப்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் எம்.பி. ராஜா பேசுகையில், “ விவசாயிகளின் அவலநிலை குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், “ வறட்சி, கடன் சுமை தாங்க முடியாமல் விவசாயிகள்  உயிர்வாழ எலிக்கறி சாப்பிடுகிறார்கள் என்று நாளேடுகளில் செய்தி வருகிறது’’ என்றார்.

விவசாயிகளிடம் பேசுங்கள்

மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் பேசுகையில், “ விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுவதையும், மனித மண்டை ஓடுகளையும் வைத்து போராட்டம் நடப்பதையும் நான் நாளேடுகள் வழியாகப் பார்த்தேன். மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் யாராவது சந்தித்து விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

அமைச்சரிடம் தெரிவிப்பேன்

இதை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகையில், “ இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை, முக்கியமானது. இந்த விசயத்தை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி, அவையின் கருத்துக்களையும், உணர்வுகளையும் தெரிவிக்கின்றேன்’’ என்று தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

கல்பாக்கம் அணு உலை புதிய சாதனை.. வரலாற்று மைல்கல்.. பிரதமர் மோடி பெருமிதம்!
Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?