உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளதால் லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது. இதனால் லட்டு விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலக புகழ் பெற்ற திருப்பதி கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளதால் லட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு, ஆரம்ப காலத்தில் எட்டு அணாவிற்கு ஒன்று என விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் ரூ.2, ரூ,5, ரூ,10, ரூ.15 என விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25-க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. ரூ.50, ரூ.300 கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறிய லட்டுவின் விலை ரூ.25-ல் இருந்து ரூ.50 ஆகவும், பெரிய லட்டுவின் விலை ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிபாரிசு கடிதத்துக்கு தரப்படும் சிறிய வடையின் விலையும் ரூ.25-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய லட்டு செய்ய ரூ.37-ம், பெரிய லட்டு செய்ய ரூ.150 ரூபாயும் செலவாகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.