“அரசு தரப்பு வாதம் உற்சாகமாகத் தொடங்கி, தன்னம்பிக்கை இல்லாமல் முடிந்தது’’ சி.பி.ஐ.க்கு சாட்டையடி கொடுத்த நீதிபதி ஓ.பி. ஷைனி

First Published Dec 21, 2017, 3:15 PM IST
Highlights
OP Shini In the allocation 2 G scam case


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில்,  முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை, அரசு தரப்பு வாதம் உற்சாகமாகத் தொடங்கி, தன்னம்பிக்கை இல்லாமல் முடிந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று  நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

வழக்கு பின்னணி:

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திமுகவை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குகளை, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி வழக்கை விசாரித்து வந்தார். 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

நீதிபதி ஓ.பி. ஷைனியின் தீர்ப்பின் விவரம்-

2ஜி அலைக்கற்றை வழக்கின் தொடக்கத்தில், சி.பி.ஐ. தரப்பு மிகவும் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வழக்கை எதிர்கொண்டது. ஆனால், வழக்கின் விசாரணை முன்னேற்றம் அடைந்தபோது, மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் சி.பி.ஐ. அனுகியது, ஆனால்,  எதை மெய்பிக்க வேண்டுமோ அதை கண்டுபிடிப்பதிலும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியது. வழக்கின் முடிவில், அரச தரப்பு வாதங்களின் நிலை என்பது, ஒட்டுமொத்தமாக மோசமடைந்து, எந்தவிதமான வழிகாட்டுதல் இல்லாமல், தன்னம்பிக்கை இல்லாமல் சென்றுவிட்டது.

இந்த வழக்கில் தொடக்கத்தில் அ.ராஜாவின் செயல்பாடுகளைக் காட்டிலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயல்பாடின்மை குறித்துதான் அதிகமான விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூளையாக இருந்து அ.ராசா தான் சதி செய்தார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

அ. ராசா இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், தடையின்றி, தன்னிச்சையாக செயல்பட்டு ஏதும் தவறு இழைத்தார்; சதி செய்தார்; ஊழல் செய்தார்; என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தவறான அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகள் குறித்தும், தீவிரமாக ஆய்வு செய்யப்படாமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது, அவர்களை நீதிமன்ற கூண்டில் கொண்டு வந்து அதை நிரூபிக்க அரசு தரப்பால் முடியவில்லை. இறுதியாக சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வாய்மொழியாக இருந்தாலும், அரசு தரப்பு அளித்த அறிக்கைக்கும் அதற்கும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. இது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தரப்பு பதிவு செய்துள்ள பல்வேறு விஷயங்கள் உண்மையில் சரியானது அல்ல. குறிப்பாக, நுழைவுக் கட்டணத்தை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கோரி நிதித்துறை செயலாளர் தீவிரமாக பரிந்துரை செய்தார் என்பதும், அ.ராசா மூலம் எல்.ஓ.ஐ. பிரிவு நீக்கப்பட்டது என்றும், நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது என்பதிலும் உண்மையில்லை.

மேற்கூறப்பட்ட விஷயங்களை தீவிரமாக நான் ஆய்வு செய்ததில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விதமான குற்றத்தையும் நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி அடைந்துவிட்டது. நன்கு திட்டமிட்டு தயார் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையாகும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!