
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி ரயில்வே நிலத்தில் குடியிருக்கும் 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பத்தினரை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
உத்தரகாண்ட் ஹல்த்வானியில் ரயில்வேக்கு சொந்தமாக 29ஏக்கர் நிலத்தில் 4 ஆயிரத்து 335 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலத்தில் வீடுகள் கட்டி குடியுருப்போர் அரசுக்கு முறையாக வரி உள்ளிட்டவற்றை செலுத்தியும் வருகிறார்கள். இங்கு பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.
ஹல்த்வானி ரயில்வே நிலையத்தைச் சுற்றி கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா பகுதிகல் உள்ளன. இந்த நிலத்தில் 4 அரசுப்ப ள்ளிகளும், 11 தனியார் பள்ளிகளும், 2 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும், 10 மசூதிகள், 4 கோயில்கள், கடைகள், என 10 ஆண்டுகளுககு மேலாக உள்ளன.
இந்தப் பகுதியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன இதை அகற்ற உத்தரவிடக்கோரியும், சட்டவிரோதமாக மணல் கொள்ளையடிக்கப்படுகிறது என்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு.? மத்திய அரசு சொல்வது என்ன ?
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.அதில், ஜனவரி 9ம தேதிக்குள் ரயில்வே நிலத்தை ஆக்கிமிரத்துள்ளவர்களை அகற்றவேண்டும், அங்கிருந்து செல்லாதவர்களை போலீஸாரை பயன்படுத்தி அகற்றலாம் என்று உத்தரவிட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி மக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் எஸ்ஏ நசீர், பிரசன்னா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் கூறுகையில் “ வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்தநேரத்தில் 50 ஆயிரம் மக்களை இரவோடு இரவாக வெளியேற்றுவது மனிதாபிமான செயல் அல்ல. இதற்கு தடை விதிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ இரவோடு இரவாக 50ஆயிரம் மக்களை வேரோடு அகற்ற முடியாது. இது மனிதநேயத்தோடு தொடர்புடைய விவகாரம். இந்த விஷயத்துக்கு சுமூகமான தீர்வு என்பது அவசியம்.
பல 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களை போலீஸார், துணை ராணுவப்படையின் மூலம் அகற்றக் கோரும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியல்ல.
அந்தப் பகுதியில் ரயில்வே சார்பிலும், அரசு சார்பிலும் கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.
இந்த விவகாரத்தில் ரயில்வே துறை, உத்தரகாண்ட் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம்.இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்படும்.” என உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு அங்கு வசிக்கும் 50ஆயிரம் மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.