
ஜம்மு & காஷ்மீர் - நிலநடுக்கம் :
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் அல்ச்சிக்கு (லேஹ்) வடக்கே 186 கிமீ தொலைவில் இன்று காலை 7:29 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது பொருள் சேதம் குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
அந்தமானில் நிலநடுக்கம் :
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டரில், 'ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற புள்ளிக் கணக்கில் இன்று அதிகாலை 2.52 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது திக்லிபூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது' என்று கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.