குஜராத்தில் பா.ஜனதா தோற்கும், பெரும்பான்மை கிடைக்காது… - சொந்த கட்சிக்கே ‘சூனியம்’ வைக்கும் எம்.பி.

First Published Dec 17, 2017, 7:01 PM IST
Highlights
The BJP will not get a majority for the next rule in Gujarat


“குஜராத்தில் அடுத்த முறை ஆட்சி அமைக்கும் அளவுக்கு பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது, தேர்தலில் தோல்வி அடையும்’’ என்று அந்த கட்சியின் மாநிலங்கள் அவை எம்.பி. சஞ்சய் காக்டே தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கணிப்புகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் குஜராத்தில் பா.ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று கூறுகின்ற நிலையில், சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே பா.ஜனதா தோல்வி அடையும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்கள் அவை எம்.பி.யாக இருப்பவர் சஞ்சய் காகடே. புனே நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சஞ்சய் கூறியதாவது-

பெரும்பான்மை இருக்காது

குஜராத் சட்டசபைத் தேர்தலைப் பொருத்தவரை, பா.ஜனதா கட்சிக்கு முழு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை மறந்துவிட வேண்டியதுதான். இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு கூட இடங்களைக் கைப்பற்றுவது கடினம்.அதே சமயம், காங்கிஸ் கட்சி, ஆட்சி அமைப்பதற்கான இடங்களில் வெற்றி பெறும்.

ஒருவேளை அனைத்து தடைகளையும் மீறி, பிரச்சினைகளையும் மக்கள் மறந்து பா.ஜனதா கட்சியை வெற்ற பெற வைத்தால், அது பிரதமர்நரேந்திர மோடி மீதான மதிப்பாகத்தான் இருக்கும்.

ஆய்வு

குஜராத் தேர்தல் தொடர்பாக நான் 6 பேர் கொண்ட குழுவை நான் அனுப்பி ஆய்வு நடத்தினேன். அந்த குழுவினர் குஜராத்தின் கிராமப்பகுதிகளில் சென்று விவசாயிகள், ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள், ஓட்டல் பணியாளர்கள் ஆகியோரைச்  சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர். இந்த சர்வேயின் அடிப்படையில் கூறுகிறேன், குஜராத்தில் பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது.

கம்யூனிஸ்ட் மட்டுமே

குஜராத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜனதா கட்சிக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் இருப்பதே தோல்விக்கு காரணமாக இருக்கும். கடந்த 22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த ஒரு கட்சியும் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது இல்லை.

விலை கொடுப்பார்கள்

பா.ஜனதா கட்சிக்கு எதிராக வீசும் அலை, எதிர்மறைகள் ஆகியவற்றுக்கு கட்சி விலை கொடுக்க நேரிடும். இந்த தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் பெரும்பாலும் வளர்ச்சி குறித்தும், வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் பேசவில்லை.

குஜராத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செய்யப்போகிறோம் என்பதையும் குறிப்பிடவில்லை, கடந்த 3 ஆண்டுகளாக என்ன முக்கியமான முடிவுகள் எடுத்தோம் என்பதையும் கூறவில்லை. எதிர்க்கட்சிகளை குறிவைத்து தாக்குவதும், வாக்காளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பேசுவதும்தான் இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!