ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற சாமியாரான 70-வயது ‘பலஹரி பாபா’ சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வர் நகரில் மதுசூதன் ஆஸ்ரமம் நடத்து வருபவர் 70வயதான சுவாமிகவுசலேந்திர பர்பனாச்சாரி பலஹரி மஹராஜ். இவர் தன்னைத் தானே கடவுள் என்று மக்களிடம் கூறிக்கொண்டு ஆசிரமம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சாமியார்பலஹரி பாபா மீது போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பிலாஸ்பூர் கூடுதல் போலீஸ் எஸ்.பி. அர்ச்சனா ஜா கூறுகையில், “ பிலாஸ்பூர்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜெய்பூர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவியின் குடும்பத்தார் நீண்ட காலமாக சாமியார் பலஹரி பாபாவின் தீவிர பக்தர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த மாணவி தற்போது பாபாவின் பரிந்துரையின் பேரில் படிப்பில் ஒரு பகுதியாக , டெல்லியில் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக உதவித் தொகையாக அந்த மூத்த வழக்கறிஞர் ரூ. 3 ஆயிரம் தருகிறார்.
இந்நிலையில், தனது முதல் மாத உதவித் தொகையை ஆசிரமத்துக்கு காணிக்கையாக வழங்க தனது பெற்றோர் கூறியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த மாணவி ஆசிரமத்துக்கு சென்றார். ஆனால், அன்று சூரியகிரணம் இருப்பதால், சாமியார் யாரையும் பார்க்க மாட்டார் என்று கூறி ஆசிரம பணியாளர்கள் அந்த மாணவியை ஆசிரமத்தில் இரவு தங்க வைத்தனர்.
இந்நிலையில், அன்று இரவு அந்த மாணவியை, பலஹரி பாபா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று அந்த மாணவி குற்றம்சாட்டுகிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால், கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தனது சொந்த ஊருக்கு இந்த மாதம் திரும்பியதும், தனது பெற்றோர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சாமியார் கைது செய்யப்பட்டார்.
சாமியார் மீது ஐ.பி.சி. 376(கற்பழிப்பு), 506(மிரட்டுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சாமியார் பலஹரி பாபாவுக்கு மருத்துவச் சோதனைகள் முடிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.