
கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும் எனவும் அதை செய்ய நாங்கள் கடவுள் இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தானேஷ் லஷ்தன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 725,000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளதாகவும், நாடு முழுதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நாடு முழுதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்ததாக நாங்கள் கருதவில்லை எனவும் ஒவ்வொரு வீட்டிலும் ஈ, கொசு உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொசுவை விரட்டுங்கள் எனக்கூற முடியாது எனவும், கொசுவை ஒழிக்க கடவுள் தான் முடியும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.