
பாகிஸ்தானிலிருந்து பலர் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை பெற வருகின்றனர். இந்தியாவில், மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு, சர்வதேச ரீதியில் பார்க்கும் போது குறைவு என்பதும், சிகிச்சை நல்ல முறையில் கிடைக்கும் என்பதும் பாகிஸ்தானியர்களின் வருகைக்கான காரணமாக உள்ளது. அப்படி இந்தியாவுக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள் பலர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகனின் சிகிச்சைக்காக இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என டிவிட்டரில் சுஷ்மாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் குழந்தை இனியும் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் பாகிஸ்தானில் உள்ள உயரதிகாரிகளிடம் மருத்துவ விசா வழங்குமாறு கூறியுள்ளேன் என்று பதில் அளித்திருந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அம்னா ஷமின், தனது தந்தை தில்லியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைச் சந்திப்பதற்காக தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த சுஷ்மா, “பாகிஸ்தானில் இருக்கும் இந்திய உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், உடனே இஸ்லாமாபாத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் விசா வழங்குமாறு கூறியுள்ளார். மேலும், “தீபாவளி நாளில் இந்தியா தகுதியான நபர்கள் அனைவருக்கும் மருத்துவ விசா வழங்கும்” எனப் பதிவு செய்துள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜின் இந்த தீபாவளிப் பரிசு அறிவிப்பு பாகிஸ்தானிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வரக் காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.