
தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வர முடியாமல் அமெரிக்காவில் தவித்த மகனுக்கு உதவக்கோரி தாய் டுவிட்டரில் கேட்டுக்கொண்டதற்காக உடனடியாக விசாபெற்றுக்கொடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்துள்ளார்.
சுஷ்மாவின் இந்த மனிதநேய உதவியை டுவிட்டரில் ஏராளமானோர் வரவேற்றுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் கர்னல் பகுதியில் வசித்து வருபவர் சரிதா தகரு. இவரின் மகன் அபய் கவுல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சரிதா தகருவின் கணவர், திடீரென மரணமடைந்தார். தந்தையின் இறுதிச்சடங்குக்கு வருவதற்கு விசா கிடைக்காததால் மகன் அமெரிக்காவில் தவித்தார்.
இது குறித்து சரிதா தகரு டுவிட்டரில் மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு தெரிவித்து உதவி கோரினார். எனது கணவர் இறந்துவிட்டார். எனது ஒரே மகன் அமெரிக்காவில் இருந்து வருவதற்கு விசா கிடைக்காமல் தவிக்கிறான். அவன் இந்தியா வர உதவுங்கள் என கோரினார்.
சரிதாவின் இந்த டுவீட் வைரலாகி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சென்று அடைந்தது.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் "விஜயதசமி, மொகரம் என 2 நாட்களும் இந்திய தூதரகத்திற்கு விடுமுறை. எனினும் நான் இதுகுறித்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்.
அமெரிக்காவில் வசிக்கும் உங்கள் மகனின் தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வையுங்கள். தூதரகம் திறந்தவுடன் உடனடியாக உங்கள் மகனுக்கு விசா கிடைக்கும்" என்று சரிதாவிற்கு பதில் அளித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சரிதாவின் மகன் அபய் கவுலின்தொலைபேசி எண்ணைப் பெற்று அவரை தொடர்புகொண்டனர்.
அவரை நேரில் வரவழைத்து விசா வழங்கி முறைப்படி இந்தியாவுக்கு அனுப்பிவைத்தனர். அவரும் குறித்த நேரத்தில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இந்த செயலை நெட்டிசென்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்