
ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், கடந்த 2 வாரமாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அரை நிர்வாண போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர், மரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களிடம் சமரசம் பேசி கீழே இறங்க செய்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், விவசாயிகளின் தற்கொலை பிரச்னை மிக முக்கியமானதாகும். தற்கொலை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது உள்பட பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் முன் வைத்துள்ளது.
விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து 4 வாரங்களில், விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.