
தனிநபர் உரிமைகளும், அரசின் பொறுப்புகளும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் சமநிலையுடன் கையாளப்பட வேண்டும்' என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை திட்டம் அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதுதானா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களையும், ஒவ்வொரு பரிவர்த்தனையையும் மத்திய அரசு கண்காணிப்பதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று வாதிட்டார்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள், பயங்கரவாத அச்சுறுத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூழலில், தனிநபர் உரிமைகளும் அரசின் பொறுப்புகளும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் சமநிலையுடன் கையாள வேண்டிய அவசியம் உள்ளது என்றனர்.
இதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பில் மேலும் சில மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில், அடுத்தகட்ட விசாரணை வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், தகவல் பாதுகாப்புச் சட்டத்தை வரையறை செய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வரும் மார்ச் மாதம் தனது ஆய்வு அறிக்கை அளித்துவிடும் என்று தெரிவித்தார்.