"சிறப்பு குழந்தைகளுக்கு" 18வயது வரை இலவச கல்வி! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

First Published Nov 23, 2017, 1:42 PM IST
Highlights
Special For Children Free Education till 18 Years! Central government orders


கற்றலில் குறைபாடு உள்ள சிறப்பு குழந்தைகள், (பார்வையற்றவர்கள், காதுகேளாதோர், ஆட்டிசம் பாதிப்பு) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 18 வயது வரை இலவசமாக கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது-
 
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் அடிப்படையில் இந்த கல்வியை அந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை இலவசமாக அளிக்க மாநிலத்தில் உள்ள கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வகுப்பறைகள், ஆசிரியர்கள், கற்றல் சூழலை ஏற்படுத்தி, மற்ற மாணவர்களோடு இயல்பாக பழகும் சூழலை உருவாக்க வேண்டும் .
 
மேலும், பாடங்களிலும், தேர்வுமுறையிலும் தேவையான மாற்றங்களை சிறப்புக் குழந்தைகளுக்காகச் செய்யலாம். சிறப்புக் குழந்தைகள் தேர்வுகளை முழுமையாக எழுதி முடிக்க அவர்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கலாம், அவர்கள் தேர்வு எழுத தனியாக ஒருநபர், 2-ம்,3-ம்மொழிகளை தேர்வு செய்தலில் இருந்து விலக்கு அளித்தல் போன்ற சலுகைகளை வழங்கலாம்.
 
மாநில அரசுகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சிகளில் இந்த சிறப்புகுழந்தைகள் 18வயது வரை கல்வி கற்க ஏதுவான சூழலை உண்டாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குழந்தைகள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்திலோஅல்லது வேறு எந்த பள்ளிக்கூடத்திலோ படிக்க விரும்பினாலோ அங்கு படிக்க நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு குழந்தைகள் படிக்க விரும்பும் பள்ளிகளில், நிர்வாகம் அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பிரெய்லி கல்வி, காதுகேளாதாவர்களுக்கான பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை நியமிக்க வேண்டும். இந்த குழந்தைகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்களை 18 வயது வரை இலவசமாக அளிக்க மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறப்பு குழந்தைகள், மாற்றித்திறனாளி குழந்தைகளுக்கு இடம் அளிக்க  சில பள்ளிக்கூட நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. இது தொடர்பாக மனித வளத்துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்துபுகார்கள் சென்றதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

click me!