
மோட்டார் வாகன பயணத்தின்போது செல்போன்களை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று கேரள உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு பைக்கில் சென்ற இருவர் செல்போனில் பேசியபடி சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அம்மாநில போக்குவரத்து காவல்துறை அவர்களுக்கு அபராதம் விதித்தது.
அபராத தொகையை கட்டிய அவர்கள், போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அவர்கள் கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ஷபீக், சோமராஜன் அமர்வு விசாரணை செய்தது. விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பளித்த நீதிபதிகள் ஷபீக், சோமராஜன், கேரள காவல்துறை சட்டத்தின் 118 இ பிரிவின்படி வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டுவதும், பிறருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுவதும்தான் தண்டனைக்கு உரிய குற்றம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், 118 இ பிரிவின்படி, எந்த இடத்திலும் செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டினால் பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, அச்சுறுத்தல் ஏற்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே கேரள காவல்துறை சட்டத்தின்படி செல்போன் பேசிக் கொண்டு மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்களை தண்டிக்க இயலாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வாகன பயணத்தின்போது செல்போன்களை பயன்படுத்த விதிக்கக்கூட சட்டத்தில் இடம் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.