
மகன் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும், ஊரார் ஒதுக்கி வைத்ததாலும், மனமுடைந்த குடும்பத்தார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மறையூரை சேர்ந்தவர் முருகன். இவர், அங்குள்ள எஸ்டேட் ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பானுபிரியா மற்றும் ஒரு மகனும் உள்ளனர். பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பானுபிரியா படித்து வந்தார்.
இந்த நிலையில், உடுமலை ரயில்வே தண்டவாளம் அருகே இவர்கள் மூன்று பேரும் பிணமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முருகனின் மகன், வேறு சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முருகனின் மகன், வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், முருகன் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஊரார் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், முருகன், அவரின் மனைவி மற்றும் மகள் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ததால், ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.