உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் 59 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் திறந்த வெளிக்கழிப்பிடமே இருக்காது என்று முதல்வர் ஆதித்யநாத்தெரிவித்துள்ளார்.
லக்னோவில் பஞ்சாயத்து ராஜ் நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது-
ஸ்மார்ட் கிராமங்கள்
ஸ்மார்ட் நகரங்கள் குறித்து பேசும் போது ஸ்மார்ட் கிராமங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருக்கிறார். ஆதலால், எங்கள் மாநிலத்தில் உள்ள 59 ஆயிரம் கிராமங்களையும் நவீனத்தின் அடிப்படையில் இணைக்கப்படும். எனக்கு இப்போது ஸ்மார்ட் கிராமம்தான் முக்கியம். அதுமட்டுமல்லாமல் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் 59 ஆயிரம் கிராமங்களில் திறந்த வெளிக்கழிப்பிடம் என்ற விசயமே இருக்காது.
5 ஆயிரம் ஆண்டுகள்
பணமில்லா பரிவர்த்தனை மூலமே ஊழலை ஒழிக்க முடியும். கடவுள் கிருஷ்ணர், அவரின் நண்பர் குசேலர் ஆகியோரிடம் இருந்து பணமில்லா பரிவர்த்தனையை கற்க முடியும். கிருஷ்ணரை சந்திக்ககுசேலர் சென்றபோது, கையில் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், குசேலர் வீட்டுக்கு திரும்பிய போது, அவரின் வீடு அரண்மனையாக மாறி இருந்தது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாத்தியப்பட்ட பணமில்லா பரிவர்த்தனை இப்போது சாத்தியமாகாதா?
ஊழலை ஒழிக்கலாம்
பணமில்லா பரிவர்த்தனையை தொடர்ந்து மேற்கொண்டால், ஊழல் படிப்படியாக குறையும். யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், அவர்களின் வங்கிக்கணக்குக்கு பணத்தை செலுத்துகிறேன் என்று கூறுங்கள். அவர் அந்த பணத்தை பெற தயாராக இருந்தால், சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.
வேறுபாடு இருக்காது
மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு மட்டுமே முறையாக மின்சாரம் கிடைக்கிறது. மீதமுள்ள 71 மாவட்ட மக்கள் வாக்களிக்கவில்லையா?. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது. என் ஆட்சியில் மின்சாரம் பகிர்ந்தளிப்பதில் எந்தவிதமான வேறுபாடும் இருக்காது. 2018ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். உங்களுக்கு இந்த மின்சார வசதி கிடைக்க வேண்டுமாயின் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.