Lok Sabha election 2024: நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு!

Published : May 31, 2024, 06:58 PM IST
Lok Sabha election 2024: நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு!

சுருக்கம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது

2024 மக்களவைத் தேர்தலில் 7ஆவது மற்றும் நிறைவுக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெறுகிறது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல், ஒடிசா மாநில சட்டப்பேரவையில் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையில் 6 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.  இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவானது வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிழல்தரும் பந்தல், குடிநீர், சாய்வுதளம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உரியமுறையில் செய்யப்பட்டுள்ளன. 

வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள  சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடந்த 6 கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர். கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

Lok Sabha Elections 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஏன் தவறாக அமைய வாய்ப்பு?

நாளை நடைபெறவுள்ள இறுதிகட்ட வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரம் தொகுதிக்கேற்ப சில இடங்களில் மாறுபடும். இறுதிகட்ட தேர்தலுக்காக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதி கட்டத் தேர்தல் தொடர்பான பணிகளில் 10.9 லட்சம் பணியாளரக்ள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் வாக்களிக்க 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5.24 கோடி பேர் ஆண்கள். 4.82 கோடி பேர் பெண்கள். 3574 பேர் மூன்றாம் பாலினத்தவர். இறுதி கட்ட தேர்தலுக்காக மொத்தம் 172 தேர்தல் பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே அந்தந்த தொகுதிகளுக்கு சென்று பணிகளை கவனித்து வருகின்றனர்.

இறுதி கட்ட தேர்தல் பணியில் 2707 பறக்கும் படைகள், 2799 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1080 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 560 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும்  பணியில் ஈடுபட்டுள்ளன. 201 சோதனைச் சாவடிகள் மூலம் சர்வதேச எல்லைகளும் 906 சோதனைச் சாவடிகள்  மூலம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வாக்காளரும் எளிதாக வாக்களிக்கும் வகையில் குறைந்தபட்ச வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர 12 மாற்று ஆவணங்களின் பட்டியலையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒரு வாக்காளர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். அந்த விவரங்களை https://tinyurl.com/43thfhm9 என்ற இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு சதவீதம் அவ்வப்போது வெளியிடப்படும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் இரவில் முழுமையான மற்றும் துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். வோட்டர் டர்ன்அவுட் (voterturnout) மொபைல் செயலியில் அனைத்துக் கட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

EV Car Fire Accident: சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் கார்.. பற்றி எரிந்த வீடு.. 7 பேர் உடல் கருகி பலி..!
Facebook Scam: எலான் மஸ்க் கான்பூர்ல ஸ்கூல் கட்டுறாரா? டீச்சரிடம் ரூ.1.57 கோடி சுருட்டிய கும்பல்