தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்: காங்கிரஸ் விமர்சனம்

By Ramya sFirst Published May 28, 2023, 2:58 PM IST
Highlights

தன்னை தானே புகழும் சர்வாதிகாரப் பிரதமர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது. " பாராளுமன்ற நடைமுறைகளை முற்றிலும் அலட்சியப்படுத்திய, தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் சர்வாதிகார பிரதமர்" புதிய வளாகத்தை திறந்து வைத்தார், மேலும் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவாக கருதப்படுவதை விட முடிசூட்டு விழாவாக கருதப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "நாடாளுமன்றம் மக்களின் குரல்! நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக பிரதமர் கருதுகிறார்" என்று கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நடந்த அதே நாளில் நடந்த நிகழ்வுகளை அவர் பட்டியலிட்டார்.

அவரின் பதிவில் “ புதிய பாராளுமன்றத்தின் பதவியேற்பு விழாவில் எத்தனை கட்சிகள் கலந்து கொள்கின்றன, எத்தனை கட்சிகள் வரவில்லை? எண்கள் என்ன சொல்கின்றன? "இந்த நாளில், மே 28:  இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு அதிகம் செய்த நேரு, 1964 ஆம் ஆண்டு தகனம் செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் கொலைக்கு வழிவகுத்த சாவர்க்கர் 1883 இல் பிறந்தார்.

இதையும் படிங்க : செங்கோலை வைப்பதற்கு முன்பு யோசித்த பிரதமர் மோடி.! ஆதீனங்கள் ஆச்சர்யம் - இதை நோட் பண்ணிங்களா!

இந்த நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற முதல் பழங்குடி பெண்- தனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றவும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்துவைக்கவும் அனுமதிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மற்றும் தற்போதைய இந்திய ஜனாதிபதிகளை பதவியேற்பு விழாவிற்கு அழைக்காததற்காக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான கே.சி.வேணுகோபால் விமர்சித்தார். "புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், அப்போதைய ஜனாதிபதி. ராம்நாத் கோவிந்த் விழாவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். அதன் தொடக்க விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு ஓரங்கட்டப்பட்டார்," என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில் “ இது ஆர்எஸ்எஸ்-ன் உயர் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் எதிர்ப்பு" மனநிலையாகும், இதன் காரணமாக அவர்களின் உயர் அரசியலமைப்பு பதவிக்கு தகுதியான மரியாதை மறுக்கப்படுகிறது. அவர்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டிருப்பது, பிரதமர் மோடி தனது தேர்தல் அரசியலுக்கான அடையாளமாக அவர்களைப் பயன்படுத்துவார் என்பதைக் காட்டுகிறது, ஆனால் அத்தகைய குறிப்பிடத்தக்க மற்றும் வரலாற்று நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க அவர்களை அனுமதிக்க மாட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி தலைவர் சரத் பவார், பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். "நான் காலையில் நிகழ்வைப் பார்த்தேன். நான் அங்கு செல்லவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அங்கு நடந்ததைக் கண்டு நான் கவலைப்படுகிறேன். நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறோமா? இந்த நிகழ்வு வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தானா?" என்று சரத்பவார் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். ஜனாதிபதி நாற்காலியை மோடி தலைமையிலான அரசு அவமரியாதை செய்வதாக கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் கட்டுமானம் 2019 இல் தொடங்கியது. ₹1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் மூன்று மாடிகள் மற்றும் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில், பிரதமர் வரலாற்று மற்றும் புனிதமான "செங்கோலை" பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவினார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய பாராளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் - கிளம்பிய புது சர்ச்சை

click me!