கர்ப்பமாக இருந்தால் வேலை கிடையாது. சர்ச்சைக்குள்ளான எஸ்.பி.ஐ யின் புதிய திருத்தம்

By Thanalakshmi VFirst Published Jan 28, 2022, 8:31 PM IST
Highlights

பெண்கள் 3 மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருந்தால் வங்கியின் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றாலும் பணியில் சேர எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

“பெண்களுக்கு எதிரான” எஸ்பிஐ வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) கோரியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சமீபத்திய சுற்றறிக்கையில், கர்ப்பிணிப் பெண்களை நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதலைத் திருத்தியுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேர்வர்கள் தற்காலிகமாக தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குள் பணிக்கு சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலில், ஆறு மாத காலம் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வங்கியில் வேலை செய்வது கருவின் வளர்ச்சியில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகுந்த மருத்துவரின் சான்றிதழ் சமிர்பித்தால் பணியில் அமர்ந்தலாம் என்று கூறியது. இதில் தற்போது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது பல்வேறு தரப்பில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் “கர்ப்பிணிப் பெண்களுக்கான நியமனம் தொடர்பான அறிவுறுத்தலை எஸ்பிஐ திருத்தியுள்ளது.3 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பணியில் நியமிக்கப்பட மாட்டார்கள். பிரசவம் முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திருத்தப்பட்ட வழிக்காட்டுதல் பாகுப்பாடு நிறைந்தது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2009 இல் ஸ்டேட் பேங்க் அதன் உள்ளூர் தலைமை அலுவலகங்களுக்கு பெண்களுக்கு உடனடியாக பணி நியமனம் அல்லது பதவி உயர்வுக்காக கர்ப்பத்தை ஒரு ஊனமாக கருதக்கூடாது என்பதற்கான வழிமுறைகளை வழங்கியது என்று AIDWA யின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா கூறுகிறார். மேலும் அப்போது அந்த அறிவிப்பு வருவதற்கு, கேரளத்தை சேர்ந்த சில பெண்கள் அமைப்புகள் போராட்டம் மற்றும் அப்போதைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் விளைவாக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்.

பணி நியமனம் மற்றும் பணி உயர்வு நேரத்தில் பெண் பணியாளர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்கவும், கர்ப்ப காலத்தில் பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றை தள்ளிப்போடும் வகையில் அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பைச் சமர்ப்பிக்கவும் எஸ்.பி.ஐ வலியுறுத்தியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண் ஊழியர்கள் தங்கள் மாதவிடாய் விவரங்களை அறிவிக்க வேண்டும் எனவும் கருப்பை, மார்பகம் தொடர்பான நோய்பாதிப்பு குறித்தும் எந்தவொரு ஆதாரத்திலும் உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் எஸ்.பி,ஐ யானது, கருவில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது என்று சிறப்பு மகளிர் மருத்துவ நிபுணரின் சான்றிதழை அளித்தால், அத்தகைய தனிப்பட்ட விவரங்கள் இல்லாமல், பெண்கள் கருவுற்ற ஆறாவது மாதம் வரை பணியமர்த்துவது என்று முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!