இந்தியாவின் மணல்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் இத்தாலியின் மிக உயரிய கோல்டன் சாண்ட் ஆர்ட் விருது-2019 பெற்றார்.
ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் சுதர்சன் பெற்றார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இத்தாலியின் லீஸி நகரில் இன்டர்நேஷனல் ஸ்காரானோ சான்ட் நேட்டிவிட்டி சிற்பக் கலைப் போட்டி கடந்த 13-ம்தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்தது.
இதில் இந்தியாவின் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ரஷிய கலைஞர் பவேல் மினகோவுடன் சேர்ந்து பங்கேற்றார். இந்த விருது பெற்றது குறித்து சுதர்சன் பட்நாயக் ட்விட்டரில் கூறுகையில் “ ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ப்ரோமோவி இன்டர்நேஷனல் ஸ்காரனோ சான்ட் நேட்டிவிட்டி அமைப்பின் தலைவர் விடோ மராசியோவிடம் இருந்து விருது பெற்றேன்.
இந்தியாவின் துணைத்தூதர் நீகாரிகா சிங்கும் விருதுபெறும்போது உடன் இருந்தார். இந்த விருதைப் பெறுவதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சிற்பக் கலைப் போட்டியில் உலகில் இருந்து 8 கலைஞர்கள் பங்கேற்றார்கள். இதுவரை உலகில் 60-க்கும் மேற்பட்ட மணற்சிறப்பப் போட்டிகளில் சுதர்சன் பட்நாயக் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது