
சஹாரா நிறுவனத்திடம் பிரதமர் மோடி மட்டும் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், 18 கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது கடந்த 2013-14ம் ஆண்டுகளில் சஹாரா நிறுவனத்திடம் ரூ. 40 கோடி லஞ்சம் பெற்றார் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ் வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல்காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சிவசேனா, எல்.ஜே.பி., ஜே.எம்.எம்., ஜே.வி.எம். உள்ளிட்ட 18 கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சஹாரா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
2 பக்கத்தில் 54 அரசியல்வாதிகளின் பெயர்களும், மற்ற இரு பக்கத்தில் 62 அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அரசியல்வாதிகளுக்கு கடந்த 2013ம் மற்றும் 2014ம் ஆண்டுகளில் எந்தெந்த தேதிகளில் எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் அவணங்களில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய ரூ.100 கோடி வரை அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2013 அக்டோபர் மற்றும் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சஹாரா இந்தியா குரூப், ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனங்களில்வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் குறித்த விவர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து புலனாய்வு விசாரணை அமைப்புகளுக்கும், கருப்பு பணம் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணைக்குழுவுக்கும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடிதமும் எழுதியுள்ளார்.
ஆனால், அந்த ஆவணங்களில் உள்ள அரசியல்வாதிகளின் முக்கிய நபர்களின் பெயர்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக ஆங்கிலநாளேட்டுக்கு , சிறப்பு விசாரணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.