சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை: கேரள அரசு திட்டவட்டம்

First Published Dec 27, 2016, 9:56 AM IST
Highlights


சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

'சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.

அடுத்த மாதம் பிரபல பெண்ணிய சமூக ஆர்வலர்  திருப்தி தேசாய், 100 பெண்களுடன் சபரிமலை கோவிலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, மஹாராஷ்டிர மாநிலம், சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உள்பட பல வழிபாட்டு தலங்களில், பெண்களை அனுமதிக்கக் கோரி, தேசாய் தலைமையில், பல போராட்டங்கள் நடந்துள்ளன.

இதைதொடர்ந்து சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க மறுப்ப்பதால், தேசாய் கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவார் என கூறப்படுகிறது. இதனால், தேவஸ்தான நிர்வாகிகளும், கேரள அரசும், பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்வதை தடுக்க தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து, கேரள அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. அதில் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோயில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது. சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என கூறப்பட்டுள்ளது. 

click me!