பொது இடங்களில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் அபராதம்..! அதிரடி உத்தரவு..!

By Manikandan S R SFirst Published Apr 20, 2020, 9:37 AM IST
Highlights

டெல்லியில் இருக்கும் மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மீறுபவர்கள் மீது ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா பாதிப்பு இன்று 17,265 ஐ எட்டியுள்ளது. இதுவரையில் 543 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் டெல்லியில் இதுவரை 2,003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 43 பேர் பலியாகி இருக்கின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பைக் கட்டுப்படுத்த முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு அபராதம் விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இருக்கும் மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மீறுபவர்கள் மீது ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் விதிகளை மீறி எச்சில் துப்புவோர் மீது 2000 ரூபாய் அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டு இருந்ததாகவும் அது அதிகபட்சமாக கருதப்பட்டதால் தற்போது முதற்கட்டமாக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். தேவைப்படும் பட்சத்தில் அபராத தொகை மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

click me!