
2017-18-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.1771.77 கோடி அபராதத்தை எஸ்.பி.ஐ. வங்கி வசூலித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுகளில் எஸ்.பி.ஐ. வங்கியின் நிகர லாபம் என்பது ரூ.1,581 கோடி மட்டுமே. ஆனால், நிகர லாபத்தைக் காட்டிலும் அபராதத்தின் மூலம் எஸ்.பி.ஐ. வங்கிக்குஅதிகமாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று ரிசர் வங்கி உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, கடந்த 2016-17ம் நிதி ஆண்டு வரை எஸ்.பி.ஐ. வங்கி அபராதம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.ஐ. வங்கிகளில் நாடுமுழுவதும் 42 கோடி மக்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர். அதில் 13 கோடி பேர் சாதாரண சேமிப்பு கணக்கும், பிரதமர் ஜன் தன் திட்டத்திலும் கணக்கு தொடங்கியவர்கள். இவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியைத் தவிர்த்து, அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.97.34 கோடியும், அதைத் தொடர்ந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ.68.67 கோடியும், கனரா வங்கி ரூ.62.16 கோடியும் வசூலித்தன.
தற்போதுள்ள நிலையில் எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களில் மூத்த குடிமக்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், அரசின் மானியங்கள் பெறுபவர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மற்றவகையில், மெட்ரோ நகரங்களில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பமாக மாதந்தோளும் ரூ.3 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்பு தொகை 50 சதவீதம் குறைந்தால் ரூ.50 அபராதமும், 50 முதல் 75 சதவீதம் குறைந்தால் ரூ.75, 75 சதவீதத்துக்கும் குறைந்தால் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும்.
நகரங்களில் ரூ. 40 முதல் ரூ.80 வரை அபராதமாக வசூலிக்கப்டுகிறது.