
வீடு,கார் மற்றும் விவசாய கடன்களை திருப்பி செலுத்த காலக்கெடு
நீட்டிப்பு… ரிசர்வ் வங்கி அறிவிப்பு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்றும் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொது மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் முன்பு மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பிரச்சனைகளை களைய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
இதுவரை 116 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வீடு,கார், விவசாயம் உள்ளிட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கனவே இதற்கான கால அவகாசம் 60 நாட்களாக நீட்டிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இந்த அறிவிப்பு செல்லும். இந்த அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி வீடு,கார் மற்றும் விவசாய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டள்ளது.