நடிகர் கமல் ஹாசனின் கம்பீரக் குரலின் உச்சரிப்புடன், தனது முதல்நாள் ஒளிபரப்பை அர்ணாப் கோஸாமியின் “ரிபப்ளிக்” செய்தி சேனல் இன்று அதிகாலை முறைப்படி தொடங்கியது.
டைம்ஸ் நவ் செய்திச் சேனலில் இருந்து வெளியேறிய பின், அர்ணாப் கோஸாமியின் செயல்பாடுகள் அனைத்து சேனல்கள் மத்தியிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிைலையில், “ரிபப்ளிக்” சேனல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
தனது முதல்நாள் ஒளிபரப்பிலேயே “பீகார் தாதா” சகாபுதீனையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவையும் “முட்டவிட்டு” நிகழ்ச்சியை தனக்கே உரிய பாணியில் அர்ணாப்கோஸாமி உச்சத்துக்கு கொண்டு சென்றார்.
லாலுபிரசாத் யாதவ் ஆதரவினால் வளர்ந்தவர் சகாபுதீன். தற்போது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக சிறையில் உள்ளார். இவரையும், லாலு பிரசாத்தையும் நேரடியாக தொலைபேசி உரையாடலில் கொண்டு வந்து, பல ரகசியங்களை உடைத்துவிட்டார் அர்ணாப். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடிக்கொண்டனர்.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு இணையாக தனியாக ஒரு அரசு(லாலுபிரசாத்) செயல்பட்டு வருகிறது. நிதிஷ்குமார் கண்டுகொள்ளாமல், ஒரு தலைப்பட்சமாக மதுவிலக்கை செயல்படுத்துகிறார் என சகாபுதீன் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, சகாபுதீனை வளர்த்து விட்டு சமூகத்துக்கு தீங்கு இழைத்த லாலுபிரசாத் யாதவ் அரசியலைவிட்டு விலக வேண்டும் என்று ஆர்ணாப் கோஸாமி தனக்கே உரிய பாணியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று அதிகாலை ரிபப்ளிக் சேனல் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதை முறியடிக்கும் முயற்சியில் இனி டைம்ஸ் நவ் சேனலும் இனி களத்தில் தீவிரமாக இறங்கும். இதனால், செய்திக்கும், பரபரப்புக்கும் பார்வையாளர்களுக்கு பஞ்சம் இருக்காது.