ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர்கள் ஆகியோரின் அடிப்படை மாத ஊதியம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கு மாதம் ரூ.2.50 லட்சமாகவும், துணை கவர்னர்களுக்கு ரூ.2.25 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை ஊதியம் ரூ.90 ஆயிரமாக இருந்த நிலையில், இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.
இருப்பினும், மற்ற வங்கிகளின் தலைவர்களோடு ஒப்பிடுகையில், ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர்கள் ஆகியோரின் சம்பளம் மிகக் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஊதியம் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் நிதி அமைச்சகம் கடந்த மாதம் 21-ந்தேதி தெரிவித்துள்ள பதிலில், “ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர்கள் ஆகியோரின் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடிப்படை ஊதியம் உயர்த்தப்பட்டு கவர்னருக்கு மாதம் ரூ.2.50 லட்சமும், துணை கவர்னர்களுக்கு ரூ.2.25 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு 2016, ஜனவரி 1-முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், புதிதாக உயர்த்தப்பட்ட ஊதிய அளவு, அடிப்படை ஊதியம் குறித்து நிதி அமைச்சகம் வெளியிடவில்லை. இதற்கு முன் உர்ஜித் படேலுக்கு அடிப்படை ஊதியம் ரூ.90 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500, இதரபடிகள் ரூ.7 ஆயிரம் என ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
இப்போது உயர்த்தப்பட்ட ஊதியத்தையும் சேர்க்கும் போது ஒட்டுமொத்தமாக ரூ.3 லட்சத்து 70 ஆயிரமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ரகுராம்ராஜன் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றார். அப்போது அவரின் ஊதியம் ரூ.1.69 லட்சம். பின் 2014, 2015 அடிப்படையில் ஊதியம் மறு ஆய்வு செய்யப்பட்டு, ரூ.1.78 லட்சம் மற்றும் ரூ.1.87 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடைசியாக 2016ஜனவரியில் ரூ.2.04 லட்சமாக இருந்தது.
இப்போது 2016, ஜனவரி முன்தேதியிட்டு ஊதியம் திருத்தப்பட்டுள்ளதால், ரகுராம் ராஜனுக்கு, 2016 செப்டம்பர் மாதம் வரையிலான நிலுவை தொகை கிடைக்குமா என்பது தெரியவில்லை.